"15 கோடி குழந்தைகளுக்கு இந்தியாவில் அடிப்படை கல்வியே கிடையாது".. கல்வியமைச்சர் பிரதான் தகவல்!
டெல்லி: இந்தியாவில் 15 கோடி குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி கிடைக்கவில்லை, அவர்கள் பள்ளி படிப்பை பெற முடியவில்லை என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் தெரிவித்துள்ளார்.
புதிய தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டு அதை பல்வேறு மாநிலங்களில் அமலுக்கு கொண்டு வர
மத்திய அரசு முயன்று வருகிறது. ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இந்த புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளது. புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது, இதை அமல்படுத்த முடியாது என்று பல்வேறு மாநிலங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் " வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழில்முனைவோர்" என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்றில் நேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்த கருத்தரங்கில் புதிய கல்விக்கொள்கை குறித்தும், இந்தியாவில் கல்வியின் நிலை குறித்தும் இவர் பேசினார்.
பேச்சு
அவர் தனது பேச்சில், இந்தியாவில் சென்செக்ஸ் கணக்குப்படி 3-22 வயது கொண்டவர்களில் மொத்தம் 35 கோடி பேர் பள்ளிகளில் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். பள்ளிகள், கல்லூரிகள், தனியார் கல்வி அமைப்புகள், அங்கன்வாடிகள், தொண்டு நிறுவன கல்வி அமைப்புகளில் இவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த வயது கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50 கோடியாகும். இதில் 35 கோடி பேர் மட்டுமே கல்வி பெற்றுள்ளனர்.
மீதம் எவ்வளவு?
இதனால் மீதம் உள்ள 15 கோடி குழந்தைகள் அடிப்படை கல்வி அறிவே பெறவில்லை என்பது உறுதியாகிறது. அவர்களை கல்வித்திட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும். அவர்களை பள்ளிகளை நோக்கி திருப்பம் வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் கடந்து விட்டது. தற்போது நிலவரப்படி இந்திய மக்கள் தொகையில் மொத்தம் 80 சதவிகிதம் பேர் கல்வி அறிவு பெற்றுள்ளனர்.
மொத்தம் எத்தனை?
மொத்தமாக 20 சதவிகிதம் பேர் கல்வி அறிவு இன்றி உள்ளனர். எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் மொத்த மக்கள் தொகையில் 25 கோடி பேர் இந்தியாவில் கல்வி அறிவு இன்றி உள்ளனர். இவர்களுக்கு அடிப்படை கல்வி அறிவு கிடைக்கவில்லை. புதிய கல்விக்கொள்கை இந்த சூழ்நிலையை மாற்றும். புதிய கல்விக்கொள்கை வெறும் ஆவணம் கிடையாது.
வழிகாட்டி
இந்தியாவின் கல்வி திட்டத்தை மாற்றுவதற்கான வழிகாட்டி இதுதான். அடுத்த 25 வருடங்களில் நாம் நிகழ்த்த போகும் சாதனைகளுக்கான வழிகாட்டி இதுதான். முதல்முறையாக நாம் திறன் மேம்பாடு கல்வி இரண்டு மீதும் கவனம் செலுத்த உள்ளோம். மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், கல்வி பெறும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இது வழி வகுக்கும் என்று, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் தெரிவித்துள்ளார்.